REV

Revelation 9

IRV

1ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. 2அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது. 3அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியில் உள்ள தேள்களின் வல்லமைக்கு இணையான வல்லமைக் கொடுக்கப்பட்டது. 4பூமியின் புல்லையும், பசுமையான பூண்டையும், மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்களுடைய நெற்றிகளில் தேவனுடைய முத்திரை இல்லாத மனிதர்களைமட்டும் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. 5மேலும் அவர்களைக் கொலைசெய்வதற்கு அவைகளுக்கு அனுமதி கொடுக்காமல், ஐந்து மாதங்கள்வரை அவர்களை வேதனைப்படுத்துவதற்குமட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது; அவைகள் கொடுக்கும் வேதனை, தேள் மனிதனைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போல இருக்கும். 6அந்த நாட்களில் மனிதர்கள் மரித்துப்போவதற்கான வழியைத் தேடுவார்கள். ஆனாலும் அவர்கள் மரிக்கமாட்டார்கள், சாகவேண்டும் என்று ஆசைப்படுவார்கள், ஆனால், சாவோ அவர்களுக்கு விலகி தூரமாக ஓடிப்போகும். 7அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகள்போல இருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொற்கிரீடம் போன்றவைகள் இருந்தன; அவைகளின் முகங்கள் மனிதர்களுடைய முகங்கள்போல இருந்தன. 8அவைகளுடைய கூந்தல் பெண்களுடைய கூந்தல்போல இருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போல இருந்தன. 9இரும்புக் கவசங்களைப்போல மார்புக்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் சத்தம் யுத்தத்திற்கு ஒடுகிற அநேக குதிரைகள் பூட்டிய இரதங்களின் சத்தத்தைப்போல இருந்தன. 10அவைகள் தேள்களின் வால்களைப்போன்ற வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாக இருந்தன; அவைகள் ஐந்து மாதங்கள்வரைக்கும் மனிதர்களைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாக இருந்தன. 11அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். 12முதலாம் ஆபத்து கடந்துபோனது; இவைகளுக்குப் பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ வருகிறது. 13ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலும் இருந்து ஒரு சத்தம் உண்டாகி, 14எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனைப் பார்த்து: ஐபிராத்து என்னும் பெரிய நதியிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்வதைக்கேட்டேன். 15அப்பொழுது மனிதர்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொல்வதற்காக ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருடத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள். 16குதிரைப்படைகளாகிய இராணுவங்களின் எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது; அவைகளின் எண்ணிக்கையைச் சொல்லக்கேட்டேன். 17குதிரைகளையும், அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் பார்த்தவிதமாவது; அவர்கள் அக்கினி சிவப்பு நிறமும், நீலநிறமும், கந்தக மஞ்சள் நிறமுமான மார்புக்கவசங்களை உடையவர்களாக இருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போல இருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டு வந்தது. 18அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்டுவந்த அக்கினி, புகை, கந்தகம் என்னும் இந்த மூன்றினாலும் மனிதர்களில் மூன்றில் ஒரு பங்கு கொல்லப்பட்டார்கள். 19அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலும் வால்களிலும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகள்போலவும், தலைகள் உள்ளவைகளாகவும் இருக்கிறது, அவைகளாலே மனிதர்களைச் சேதப்படுத்துகிறது. 20அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்றமனிதர்கள், பேய்களையும் பொன் வெள்ளி செம்பு கல் மரம் போன்றவைகளால் செய்யப்பட்டவைகளும், பார்க்கவும் கேட்கவும் நடக்கவும் முடியாதவைகளுமாக இருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காமல் இருப்பதற்குத் தங்களுடைய கைகளின் செய்கைகளைவிட்டு மனம்திரும்பவும் இல்லை; 21தங்களுடைய கொலைபாதகங்களை, தங்களுடைய சூனியங்களை, தங்களுடைய வேசித்தனங்களை, தங்களுடைய களவுகளைவிட்டும் மனம்திரும்பவில்லை.

Matthew Henry's chapter overview

Introduction

Revelation 9

In this chapter we have an account of the sounding of the fifth and sixth trumpets, the appearances that attended them, and the events that were to follow; the fifth trumpet (Rev 9:1-12), the sixth (Rev 9:13, etc.).

Cross-references: Rev 9:1 · Rev 9:13