Mark 8
IRV
நான்காயிரம்பேரைப் போஷித்தல்
1அந்த நாட்களிலே அநேக மக்கள் கூடிவந்திருக்கும்போது, அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாததினால், இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: 2மக்களுக்காகப் பரிதாபப்படுகிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடம் தங்கியிருந்த மூன்றுநாட்களாகச் சாப்பிட ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள். 3இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்திருப்பதினால், நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால், போகும் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். 4அதற்கு அவருடைய சீடர்கள்: இந்த வனாந்திரத்திலே ஒருவன் எங்கே இருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை மக்களுக்குக் கொடுத்து திருப்தியாக்கமுடியும் என்றார்கள். 5அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் இருக்கிறது என்றார்கள். 6அப்பொழுது அவர் மக்களைத் தரையிலே பந்தி உட்காரக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாற சீடர்களிடம் கொடுத்தார்; அவர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள். 7சில சிறிய மீன்களும் அவர்களிடம் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறச் சொன்னார். 8அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியானார்கள்; மீதியான அப்பங்களை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள். 9சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நான்காயிரம்பேராக இருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார். 10உடனே அவர் தம்முடைய சீடர்களோடு படகில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளுக்கு வந்தார். 11அப்பொழுது பரிசேயர்கள் வந்து அவரோடு வாக்குவாதம் பண்ணத்தொடங்கி, அவரைச் சோதிப்பதற்காக, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 12அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார்கள் அடையாளம் தேடுகிறது ஏன்? இந்தச் சந்ததியார்களுக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவது இல்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 13அவர்களைவிட்டு மறுபடியும் படகில் ஏறி, அக்கரைக்குப் போனார்.
பரிசேயர்கள் மற்றும் ஏரோதின் புளித்த மாவு
14சீடர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படகிலே அவர்களிடம் ஒரு அப்பம்மட்டுமே இருந்தது. 15அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக்குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கற்பித்தார். 16அதற்கு அவர்கள்: நம்மிடம் அப்பங்கள் இல்லாததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். 17இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: உங்களிடம் அப்பங்கள் இல்லாததினால் நீங்கள் யோசனைபண்ணுகிறது ஏன்? இன்னும் சிந்திக்காமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்களுடைய இருதயம் கடினமாக இருக்கிறதா? 18உங்களுக்குக் கண்கள் இருந்தும் பார்க்காமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்காமல் இருக்கிறீர்களா? நினைத்துப்பார்க்காமல் இருக்கிறீர்களா? 19நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள். 20நான் ஏழு அப்பங்களை நான்காயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். 21அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார்.
பெத்சாயிதாவில் குருடன் சுகமாக்கப்படுதல்
22பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். 23அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கரங்களை வைத்து: எதையாவது பார்க்கிறாயா? என்று கேட்டார். 24அவன் பார்த்து: மனிதர்களை நடக்கிற மரங்களைப்போலப் பார்க்கிறேன் என்றான். 25பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கரங்களை வைத்து, அவனைப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் பார்வைப்பெற்று, எல்லோரையும் தெளிவாகப் பார்த்தான். 26பின்பு அவர் அவனைப் பார்த்து: நீ கிராமத்திற்குள் செல்லாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
கிறிஸ்துவைப்பற்றிய பேதுருவின் அறிக்கை
27பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா நாட்டைச்சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 28அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 29அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் கிறிஸ்து என்றான். 30அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.
கிறிஸ்துவின் பாடுகளைக்குறித்து முன்னறிவித்தல்
31அவைகள் அல்லாமல், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார். 32இந்த வார்த்தையை அவர் தெளிவாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துபேசத் தொடங்கினான். 33அவர் திரும்பித் தம்முடைய சீடர்களைப் பார்த்து, பின்பு பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்குரிவைகளைச் சிந்திக்காமல் மனிதனுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்துபேசினார். 34பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரவேண்டும். 35தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான், எனக்காகவும், நற்செய்திக்காகவும் தன் வாழ்வை இழந்துபோகிறவன் அதைக் காப்பாற்றிக்கொள்ளுவான். 36மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? 37மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்? 38எனவே விபசாரமும் பாவமும் உள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தமது பிதாவின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது வெட்கப்படுவார் என்றார்.
Introduction
Mark 8
In this chapter, we have, I. Christ's miraculous feeding of four thousand with seven loaves and a few small fishes (Mar 8:1-9). II. His refusing to give the Pharisees a sign from heaven (Mar 8:10-13). III. His cautioning his disciples to take heed of the leaven of Pharisaism and Herodianism (Mar 8:14-21). IV. His giving of sight to a blind man at Bethsaida (Mar 8:22-26). V. Peter's confession of him (Mar 8:27-30). VI. The notice he gave his disciples of his own approaching sufferings (Mar 8:31-33), and the warning he gave them to prepare for sufferings likewise (Mar 8:34-38).
Cross-references: Mark 8:1 · Mark 8:10 · Mark 8:14 · Mark 8:22 · Mark 8:27 · Mark 8:31 · Mark 8:34